விருபா

தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு

RSS
  • Home
  • About
  • Contact

வலி - அறிவுமதியின் புதிய நூல்

2006-11-28 by விருபா - Viruba | 2 கருத்துகள்
இலங்கை ராணுவத்தின் அகோரத் தாக்குதல்களில் உடைமைகளை இழந்து, தப்பிப்பிழைத்து, நள்ளிரவில் இரு நாட்டு கடற்படைகளின் கண்ணில் படாது கடல் கடந்து, தமிழ் நாட்டிற்கு வந்து சேரும் ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்து நூல் வடிவில் தந்துள்ளார்.


வலி - அறிவுமதியின் புதிய நூல்

இந்நூலிற்கு வழங்கப்பட்டுள்ள முன்னீடுகளில் இருந்து.......

நெகிழ்வுரை - இரா. நல்லகண்ணு

இலங்கையிலிருந்து தப்பிப்பிழைத்து, கடல் கடந்து இந்தியக்கரையில் சேர்ந்த ஈழத்தமிழ் மக்களின் துயர்களைக் கவிஞர் அறிவுமதி அவர்கள் கவிதைகளாக வடித்துத்தந்திருக்கிறார்.

இதை வெறும் உணர்ச்சிச் சொற்களால் சேர்க்கப்பட்ட கவிதைகளாக அல்ல; அக்கறையுள்ள ஒரு கவிஞன் நெஞ்சிலிருந்து கசிந்து சொட்டும் இரத்த திவலைகளாகவே உணர முடிகிறது .

உலகில் பல்வேறு நாடுகளில் ஆளும் பாசிச சக்திகளால் பாதிக்கப்படும் மக்கள், தப்பிப் பிழைத்து வாழத்துடிக்கிறார்கள். பிறந்த மண்ணிலிருந்து வெளியேறி எங்காவது ஓடிப்போய் உயிர் வாழலாமென்று நினைத்து புலம்
பெயர்ந்து செல்கிறார்கள். இவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். உலகெங்கும் அகதிகள் பிரைச்சனையும் குடிமக்களின் பிரைச்சனையாகக் கருதப்பட வேண்டுமென்று உலக மனித உரிமை அமைப்புகளும், செஞ்சிலுவைச்சங்கமும் அங்கீகரித்துள்ளன.

அதில் நாட்டுக்கு நாடு ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. திபத்திலிருந்து வெளியேறி வந்த புத்த பிட்சு தலாய்லாமாவும் அவரைச் சேர்ந்தவர்களும் இந்திய நாட்டின் மரியாதைக்குரிய அகதிகளாக ராஜோபசாரத்துடன் நடத்தப்படுகிறார்கள். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தில் வாழ்கிறார்கள்.

இலங்கை இனப்பிரச்சினை கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வருகிறது. இலங்கை அரசு இனப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

19ஆவது நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில் வேலையாட்களாக இந்தியாவில்லிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மலைகளில் தேயிலைத் தோட்டம் போட்டுக்கொடுத்தார்கள். நாடுகள் விடுதலை பெற்றதும் நாட்டைப் பண்படுத்திக் கொடுத்த இந்தியத் தமிழர்களை இலங்கை அரசு விரட்டியது. நாடற்ற தமிழர்களாகக் கருதப்பட்டார்கள். சாஸ்திரி பண்டாரநாயகா ஒப்பந்தம் நடந்தது. பல்லாயிரம் பேர் இந்தியாவில் தமிழகத்துக்கு வந்துநிரந்தர அகதிகளாக்கப்பட்டனர். பல்லாயிரம் தொழிலாளர்கள் இலங்கையில் மலையகத்தமிழர்களாக வாக்குரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக் குடிகள், அத்தீவின் பெருமைக்குரியவர்கள் மட்டுமல்ல; தமிழுக்கும் பலவகையில் பெருமை சேர்த்தவர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய விபுலானந்த அடிகள் மகாகவி பாரதிக்கு விழா எடுக்கவேண்டுமென்று முதல் குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர். ஆறுமுக நாவலர், கனகசபைப் பிள்ளை, ந.சி. கந்தையா இலக்கியத்தில் புதிய பார்வையைக் கொடுத்த பேராசிரியர்கள்; கைலாசபதி, சிவத்தம்பி, வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞ்ஞர்கள் அரும்பெரும் சாதனை படைத்தவர்கள். டேனியல், டொமினிக் ஜீவா போன்றவர்கள் எழுத்திலக்கிய முன்னவர்கள்.

இத்தகைய பெருமை சார்ந்த மக்களின் வாரிசுகளான ஈழத்தமிழ் மக்கள் பிறந்த மண்ணில் வாழ முடியாமல் வெளியேறி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள். அவர்களின் துன்ப, துயரங்களை நினைத்து வேதனைப்படும் கவிஞர் அறிவுமதி தமிழ் அகதிகளின் மனத்துடிப்பைக் கவிதைகளாக வடித்திருக்கிறார்.

இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்

நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.


இது கடல் கடந்து வந்தவர்களின் முதல் சோகம்.

அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்

வலிக்கவில்லை

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்

வலிக்கிறது


இது இரண்டாவது சோகம்.


தமிழ் அகதிகள் வாழும் இடத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது, நெஞ்சை உலுக்குகிறது.

நேற்று வரை
சேலைகள்
இன்றுமுதல்
சுவர்கள்


காதவழி தூரத்தில் உள்ளது யாழ்ப்பாணக்கரை. தமிழகத்தில் அடைக்கலம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகளைப் பார்த்துப் பார்த்து மரத்துப்போன நமது மனசாட்சியை உலுக்குகிறார் கவிஞர் அறிவுமதி.

பஞ்சம் பிழைக்க
மாநிலம்
தாண்டிப்போகிறோம்

உயிர் பிழைக்க
கடல் தாண்டி
வருகிறீர்கள்


- - - - - - - - -

முகாமிற்கு
அருகில் உள்ள
பள்ளியிலிருந்து
கேட்கிறது

யாதும் ஊரே
யாவரும் கேளிர்


இரு கவிதைகளும் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பிஜித் தீவிலுள்ள கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப்பெண்கள் பட்ட துயரை மகாகவி பாரதி 1916 இல் பாடினார்.

நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினில் போயதைக்
காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப் பாய்காற்றே

என்று.

இன்று 2006 இல் ஈழத்தமிழ் அகதிகளின் துயரத்தைச் சாரமாகக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. இன்னும் ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாவிட்டாலும் தமிழ் மண்ணில் தஞ்சமடைந்த ஈழத்தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்கு வழிகள் காண இக்கவிதைத் தொகுப்பு தூண்டுதலாக அமையும் என்று நம்புகிறேன்.

**********************


வலியுரை - காசி ஆனந்தன்


. . . . . .
பள்ளிக்குப் போன தர்ஷினி சிங்கள
வெறியர்களால் கடத்திக் கொலை
செய்யப்பட்ட பழைய நிகழ்ச்சி நெஞ்சை
மிதிக்கும்.

பொடிச்சி வருவாளா?

வலி

.......
படகு கிழியும்.

கடல் அலையின் பேரிரைச்சலை விழுங்கும்
கதறல்.

தமிழீழ உறவுகளின் உடல்கள் கடலில்
புதைக்கப்படும்

வலி

தமிழீழம் இந்த வலிகளின் இடையேதான்
விடுதலை நெருப்பில் தடம் பதிக்கிறது.

''வலி'' சுமந்து அறிவுமதி இந்நூலில் வருகிறார்.

எதைப்பற்றிய படைப்பானாலும் தமிழின்
உச்சத்தைத்த தொடுவது அறிவுமதி இலக்கியம்

அறிவுமதியின் ''வலி''யும் அப்படித்தான்.

**********************

உயிருரை - சீமான்

இந்த வலிகள் எனக்கான வலிகள் மட்டுமல்ல; அண்ணன் அறிவுமதிக்கான வலிகள் மட்டுமல்ல; அனைத்துத் தமிழர்களுக்குமான வலிகள்.

இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்.

என்று அண்ணன் அறிவுமதி எழுதியிருக்கிறார். நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால் அந்த உயிரை விடுவதற்கும்

ஒரு நாடு வேண்டுமல்லவா?

**********************

96 பக்கங்களில் நெஞ்சை உருக்கும் படங்களுடன், நேர்த்தியான சிறந்த கட்டமைப்புடன் வெளிவந்திருக்கும் இந்நூலை தமிழ்மண் பதிப்பத்தார் பதிப்பித்துள்ளார்கள். இதன் விலை 70 இந்திய ரூபா ஆகும்



அது ஒரு கனாக்காலம்

2006-11-22 by விருபா - Viruba | 0 கருத்துகள்
இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் இயக்கி வெளிந்த "அது ஒரு கனாக்காலம்" திரைப்படத்தின் திரைக்கதை நூல் வடிவம் பெற்றுள்ளது.


அது ஒரு கனாக்காலம்

விரைவில் வெளிவர இருக்கும் இந்நூலின் முன்னுரையில் இருந்து சில துளிகள்....

"அது ஒரு கனாக்காலம்" ஒரு முக்கியமான தேசிய விருது கிடைத்திருக்கக்கூடிய படம். இதன் "ட்ரான்ஸ்க்ரிப்ட்"டைப் படிக்கும் போது ஒரு
திரைக்கதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான பல பயனுள்ள குறிப்புகள் திரைத்துறை மாணவர்களுக்கும், ரசிகர்களுக்கும் கிடைக்கின்றன.
- - சுஜாதா - -

"அது ஒரு கனாக்காலம்" திரைக்கதை நூல் வடிவில் வருவது, ஒரு நல்ல அறிகுறி. திரைப்படத்தின் இயல்பையும், அதில் கதைப் பாத்திரப்பேச்சின்
இடத்தை அறியவும், சினிமாவின் நியதிகளை, தனித்துவத்தை புரிந்துகொள்ளவும் இது பயன்படும்.
- - சு.தியோடர் பாஸ்கரன் - -

பாலு மகேந்திராவின் தேர்ந்த கதைகூறல்களும் நிகழ்வு அடுக்குகளும், பின்னணி நிலப்பரப்பும் படக்கதை வெறும் சினிமா என்ற தளத்திலிருந்து வகை மாதிரிக் குடும்பங்களின் மீதான விமர்சனம் என்ற தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன. மகனைத் தனது சொல்கேட்டு நடக்கவேண்டிவனாக மட்டுமே கருதுவதும், அவனது விலகல் போக்கு எதற்கும் தான் பொறுப்பில்லை என்று நடந்துகொள்வதுமான தந்தையர்களின் மீது, கடும் விமர்சனத்தை முன்வைக்கும் இப்படம், அத்தகைய பார்வையாளர்களை இலக்குப் பார்வையாளர்(target audience)களாகக் கணிக்கத் தவறிவிட்டது ஒரு குறைதான்.

இன்று, திரைப்படம் பார்க்க வரும் ரசிகக் கூட்டம் இளைஞர்கள்தான் என்பதைத் தீர்மானித்து, அவர்கள் விரும்பும் சில காட்சிகளை மட்டும் இணைத்து படத்தைத் தந்துள்ள இயக்குநர், சில காட்சிகளை நீக்கிவிட்டு வேறுவகையான காட்சிகளைச் சேர்த்திருந்தால்,குடும்பத்தோடு அல்லது பெற்றோர்களாகப் பார்வையாளர்கள் வந்திருக்கக்கூடும். ஊடகங்கள் தரும் பொதுப் புத்திசார்ந்த விமர்சனக் குறிப்புக்களை மட்டுமே நம்மிப் படம் பார்ப்பவர்களாக மாறிவிட்ட அவர்கள், தங்களுக்கான படம் வரும் போது அதைத் தவற விட்டுவிடுகின்றனர் என்பதுதான் உண்மை. சமூகப் பொது உளவியலை ஊடகங்கள் இவ்வாறுதான் கட்டமைத்துத் திசை திருப்புகின்றன. படுக்கையறைக்காட்சிகள் உள்ள படங்கள், விடலைகளுக்கான படங்கள்
என்று கருதி, பெரியவர்கள் தவிர்த்து விடுவதில் அதுதான் நடக்கிறது."அது ஒரு கனாக்காலம்" விடலைப் பருவத்து இளைஞர்களை வழிநடத்த்த தெரியாத பெற்றோர்களுக்கான படம் என்பதுதான் சரியானது.இந்த சமூக அக்கறைதான் அவரைப்படைப்பாளியாகவே இருக்க வைத்திருக்கிறது.
- - 2005 டிசம்பர் தீராநதியில் அ.இராமசாமி - -


இக்கதை நெடுக எளிமை பயணப்பட்டிருக்கிறது. ஒரு லாரி டிரைவரிடம் தன் கதையைச் சொல்வதிலிருந்து போலீஸ்காரன் சீனிவாசனைத் தப்பியோடிப் பிழைத்துக்கொள்ள கொள்ளச் சொல்வது வரை.

பார்வையாளன், வாழ்விலிருந்து தூண்டிக்கப்பட்ட ஒரு பகுதியிலிருந்து வருபவனைப் போலத்தான் திரைப்படத்தைக் காண வருகிறான். ஆனால் அவனை இடையூறுகள் எதுவுமின்றி வாழ்க்கைக்குள்ளே அழைத்துச் செல்ல முடிபவைதான் சிறந்த திரைப்படங்கள்.

இத்திரைப்படத்தில் நெடுக இருக்கும் எளிமை, பெரும்பாலோரைக் கவராது போனாலும் போகலாம். அது நிச்சயம் நம்முடைய தவறுதானே ஒழிய படைப்பாளியினுடையது அல்ல. அதிகமும் விசித்திரப் போக்குகள் கொண்ட கதாபாத்திரங்களைக் கதாநாயகர்களாகக் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் நம்மைப்போலவே ஒருவனைப் பார்க்கும்போது நமக்கு அவன் நம்மிலிரிந்து மாறுபட்டவனைப் போலவே தோற்றம் தரலாம். இதன் விழுக்காடு அதிகமாக உள்ள பட்சத்தில் நாம் நமத் வாழ்வின் எதார்த்தத்தைப் புறக்கணித்து சுகமான கற்பனைகளை மட்டும் ரசிக்கும் அபாயத்தினுள் விழுந்துகொண்டிருக்கிறோம் என்பதுதான் நிஜம்.

எளிமை என்பது வறுமை அல்ல, கம்பீரம்; அல்லது அதுதான் உண்மையான பிரமாண்டம்.
- - 2005 டிசம்பர் காலச்சுவட்டில் ஜே.பி.சாணக்யா - -

216 பக்கங்களைக்கொண்ட இயக்குநர் பாலுமகேந்திராவின் "அது ஒரு கனாக்காலம்" புத்தகத்தின் விலை 95.00 இந்திய ரூபா ஆகும். இதனை மித்ர வெளியீடு பதிப்பித்துள்ளது.



திரு.வி.கல்யாணசுந்தரம்

2006-11-07 by விருபா - Viruba | 0 கருத்துகள்
திரு.வி.க வின் நூல்கள் தமிழ்க்கொடை
தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புக்களைக்கொண்டுள்ளது. மொழியுணர்ச்சியும் கலையுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நிகழ்வு இந்நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் பன்முகத் தன்மை மிக்க தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் முதன்மையானவர். தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர், தமிழ் உரை நடையின் வித்தகர், தமிழகத்தில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரம் இட்ட பெருமகனார், தந்தை பெரியாருக்கு வைக்கம் வீரர் என்று பெயரை சூட்டியவரும் இவரே.

சமயத் தமிழை வளர்த்தவர்; தூய்மை, எளிமை, புதுமை என்ற மூன்று நற்பண்புகளிற்காகவே வாழ்ந்து காட்டியவர்; உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாகக்கொண்டவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக அமைந்தவர்; தமிழகம் கண்ணாரக் கண்ட மகானாக அவர் வாழ்ந்த காலத்தில் சக சான்றோர்களால் மதிக்கப்பட்டவர்; கலப்புத் திருமணத்திற்கும், விதவை
மறுமணத்திற்கும் ஊக்கம் தந்தவர்; பெண்களுக்கு சொத்துரிமைக்காக பாடுபட்டவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்று வாதிட்டவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; தமிழக மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் என்று பல பெருமைகளிற்கு உரியவர் திரு.வி.கல்யாணசுந்தரம் ஆவார்.

திரு.வி.கல்யாணசுந்தரம் தமிழிற்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு சான்று கூறுபவை அவருடைய நூல்கள். ஐம்பதிற்கு மேற்பட்ட நூல்களைப் பன்முகப் பார்வையுடன் எழுதி தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக தந்துள்ளார்.

ஆண் வர்கக்த்தின் வடிவமாக "தேசபக்தன்", பெண் வர்க்கத்தின் வடிவமாக "நவசக்தி" இதழ்கள்களை திரு.வி.க அவர்கள் உருவாக்கினார். தனது கருத்துக்களைப் பரப்புவதற்கு இவ்விரு இதழ்களையும் பயன்படுத்தினார். இவ்விரு இதழ்களினாலேயே மொழித்தூன்மையும், புதிய மொழி நடையும் தமிழக பத்திரிகைத் துறையில் ஏற்பட்டன.பொது மேடைகளில் தமிழில் பேசுவது சிறந்தது என்பதனை வலியுறுத்தி "தேசபக்தன்" செய்திகளை வெளியிட்டது, தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவிக்க துணை நின்றது.

திரு.வி.க வென்னும் பெயரில் திருவிருக்கும்
தமிழிருக்கும்! இனமிருக்கும்!
திரு.வி.க வென்னும் பெயரில் திருவாரூர்ப்
பெயரிருக்கும் இந்நாட்டில்!
திரு.வி.க வென்னும் பெயரால் தொழிலாளர்
இயக்கங்கள் செறிவுற்றோங்கும்!
திரு.வி.க வென்னும் பெயரால் பொதுச்சமயம்
சீர்திருத்தம் திகழுமிங்கே!

என்பது பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாக்கு.

தாம் சார்ந்த அரசியல் கட்சியில் ஊழல்கள் ஏற்படத் தொடங்கியதும், அரசியலில் இருந்து விடுபட முனைந்து திரு.வி.க வின் உள்ளம் சன்மார்க நெறியை நாடியது என்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படியான பல பெருமைகளுக்கு உரிய திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கல்விக் கண்ணை திறந்தவர் யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளை என்பதனை அவர் தனது வாழ்க்கைக் குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்க்கொடை

திரு.வி.க அவர்களின் 54 நூல்கள் 24 தொகுதிகளாக 2007 தமிழர் திருநாளில் வெளிவரவுள்ளது.

A.வாழ்க்கை வரலாறுகள்

1.நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
2.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
3.பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
4.நாயன்மார் வரலாறு - 1937
5.முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
6.உள்ளொளி - 1942
7.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
8.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944

B.உரை நூல்கள்

09.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
10.பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
11.காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
12.திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
13.திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941

C.அரசியல் நூல்கள்

14.தேசபக்தாமிர்தம் - 1919
15.என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
16.தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
17.தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
18.சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930
19.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
20.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
21.இந்தியாவும் விடுதலையும் - 1940
22.தமிழ்க்கலை - 1953

D.சமய நூல்கள்

23.சைவசமய சாரம் - 1921
24.நாயன்மார் திறம் - 1922
25.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
26.சைவத்தின் சமசரசம் - 1925
27.முருகன் (அல்லது) அழகு - 1925
28.கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
29.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
30.தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
31.சைவத் திறவு - 1929
32.நினைப்பவர் மனம் - 1930
33.இமயமலை (அல்லது) தியானம் - 1931
34.சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
35.சமரச தீபம் - 1934
36.சித்தமார்கக்ம - 1935
37.ஆலமும் அமுதமும் - 1944
38.பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949

E.பாடல்கள்

39.உரிமைவேட்கை (அல்லது) நாட்டுப்பாடல் - 1931
40.முருகன் அருள் வேட்டல் - 1932
41.திருமால் அருள் வேட்டல் - 1938
42.பொதுமை வேட்டல் - 1942
43.கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
44.புதுமை வேட்டல் - 1945
45.சிவனருள் வேட்டல் - 1947
46.கிறிஸ்து மொழிக்குறள் - 1948
47.இருளில் ஒளி - 1950
48.இருமையும் ஒருமையும் - 1950
49.அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
50.பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
51.சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
52.முதுமை உளறல் - 1951
53.வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
54.இன்பவாழ்வு - 1925


பாவாணர் நினைவலைகள்

2006-11-03 by விருபா - Viruba | 0 கருத்துகள்
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் வாழ்க்கை வரலாறாக அவரது மகன் மணிமன்றவாணன் என்கிற தே.மணி அவர்கள் எழுதியுள்ள பாவாணர் நினைவலைகள் என்னும் நூல் வெ.கோவலங்கண்ணன் அவர்கள் தலைமையிலான பாவாணர் அறக்கட்டளை மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

பாவாணர் நினைவலைகள்
இந் நூல் 04.11.2006 அன்று, சென்னை தியாகராயர் நகர், கோபதி நாராயணன் சாலையில் (G.N.Chetty Road) அமைந்துள்ள வயவர் (சர்) பிட்டி தியாகராயர் அரங்கில் மாலை 5.00 மணிக்கு நடைபெறும் விழாவில் வெளியிடப்படவுள்ளது.

இவ் விழாவிற்கு சென்னைப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் தலைமை தாங்கி இந்நூலினை வெளியிடுகின்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் நூலின் முதற்படியினைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்நிகழ்வில் பாவாணரின் அருந்தமிழ்ப் பணிகளுக்குத் துணைநின்ற பாவாணரின் பெருந்தொண்டர்கள் ஐவர்க்குப் பாராட்டு நிகழ்சியும் நடைபெறும்.

  • சைவ சித்தாந் நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் திரு.இரா .முத்துக்குமாரசுவாமி,

  • தென்மொழி இதழின் ஆசிரியர் திருவாட்டி தாமரை பெருஞ்சித்திரனார்,

  • தமிழ்ப்பாவை இதழின் ஆசிரியர் திரு அருளாளர் (கருணைதாசன்),

  • புன்செய் புளியம்பட்டி மறைமலையடிகள் மன்ற செயலாளர் புலவர் கா.இளமுருகன்,

  • மொழிபெயர்ப்புத் துறையின் மேனாள் துணை இயக்குநர் திரு கு.பாலசுப்பிரமணியம்,


  • ஆகியோர் பாராட்டுப் பெறுகின்றார்கள்.

      வரவேற்புரை : திரு மா.பூங்குன்றன்

      நூலாசிரியர் உரை : திரு தே.மணி

      நன்றியுரை : திரு வே.கோவலங்கண்ணனார்


    தமிழன்பர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்க அழைக்கப்படுகின்றார்கள்.


    இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

    சிறப்புடைய இடுகை

    பேர்சிவல் பாதிரியாரால் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பழமொழிகள் (Tamil Proverbs Compiled by Rev. Peter Percival)

    வலைப்பதிவு காப்பகம்

    லேபிள்கள்

    • #iatr (2)
    • 2008 புத்தகத்திருவிழா (23)
    • 2009 புத்தகத்திருவிழா (5)
    • 2010 Chennai Book Fair (2)
    • 2011 Chennai Book Fair (1)
    • அகரவரிசை (1)
    • அகராதி (5)
    • அகிலன்.த (1)
    • அரசுடமை (1)
    • அறிமுகம் (8)
    • அறிவியல் புனைவு (1)
    • இணையம் (9)
    • ஈழத்து இலக்கியம் (2)
    • ஈழம் (5)
    • எ-கலப்பை (1)
    • எழுத்தாளர் (3)
    • எஸ்.பொ (2)
    • எஸ்.பொன்னுத்துரை (2)
    • கண்காட்சி (23)
    • கணிச்சுவடி (1)
    • காந்திஜி (1)
    • கால்டுவெல் (1)
    • சாகித்ய அகாதமி (1)
    • சிற்றிதழ் (16)
    • சுஜாதா (1)
    • சென்னையின் ஆரம்பகாலப் பதிப்புகள் (1)
    • சொல்லாய்வு (1)
    • தமிழ் (1)
    • தமிழ் இணையம் (2)
    • தமிழ்99 (1)
    • தமிழக அரசின் பரிசு (4)
    • தரவுதளம் (1)
    • தாய்மொழி (1)
    • திருத்தம் (1)
    • து.உருத்திரமூர்த்தி (1)
    • தொல்தமிழ் (1)
    • நெடுங்கணக்கு (1)
    • நெய்வேலி (1)
    • பட்டறை (2)
    • படங்காட்டல் (1)
    • பவள விழா (1)
    • பழமொழிகள் (1)
    • புத்தக வரலாறு (1)
    • புத்தகம் (4)
    • புதிய இதழ் (1)
    • புதிய புத்தகம் (24)
    • பேர்சிவல் (1)
    • பொருள் நூறு (1)
    • போட்டி (2)
    • போட்டிக்கு (1)
    • மலாயா இடப்பயர்வு (2)
    • மறுப்பு (1)
    • மஹாகவி (1)
    • மானிப்பாய் அகராதி (1)
    • முன்வெளியீடு (1)
    • யாழ்ப்பாண அகராதி (1)
    • வலைப்பதிவுலகம் (1)
    • விருது (1)
    • விருபா (1)
    • வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம் (1)
    • A History of Tamil Dictionaries (1)
    • BlogDay2008 (1)
    • Caldwell (1)
    • Chennai Book Fair 2010 (2)
    • Colporul (1)
    • DRAVIDIAN (1)
    • Gregory James (2)
    • Jaffna Library (1)
    • Rev. Peter Percival (1)
    • V.S.Thurairajah (1)

    Total Pageviews

    Copyright © 2010 விருபா Wordpress Theme Blogger Template Credits For